மன்னார்குடி, பிப்.24: மன்னார்குடி அரசு மருத்துவமனையானது மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையாக கடந்த 2010ம் ஆண்டு தரம் உயர்த்தப்பட்டது. அதன் பின்னர் மருத்துவமனையில் பல்வேறு உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. மருத்துவமனையில் தற்போது 17 துறைகள் செயல்பட்டு வருகின்றன. இம்மருத்துவமனையில் நாள்தோறும் 3 ஆயிரம் உள் மற்றும் புறநோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். பொதுமக்களுக்கு விரைவாக சிகிச்சை அளிப்பதற்கான தகவல் பரிமாற்றத்தை மருத்துவர்களுக்கு செய்து கொள்வதற்கு வசதியாக தற்போது இன்டர்காம் வசதி நேற்று முதல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த வசதியை மருத்துவமனை தலைமை கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் நிலைய மருத்துவர் டாக்டர் கோவிந்தராஜன், தலைமை செவிலியர் அமுதா, அன்புக்கரசி மற்றும் செவிலியர்கள், மருத்துவமனை பணியாளர்கள் பங்கேற்றனர்.