சென்னை: நடிகர் கயல் சந்திரனுக்கு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் வாக்கு செலுத்த முடியாமல் திருப்பி சென்றார். வேளச்சேரி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சங்கரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு, தனது ஜனநாயக கடமையை நிறைவேற்ற நடிகர் கயல் சந்திரன் நேற்று காலை வருகை தந்தார். ஆனால், அதிகாரிகள் மேற்கொண்ட சரிபார்ப்பில் அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என்பது தெரியவந்தது. இதனால், வாக்குச்சாவடிக்குள் செல்ல அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
தொடர்ந்து, வாக்கு செலுத்த முடியாத நிலையில் ஏமாற்றத்துடன் அவர் அங்கிருந்து திரும்பிச் சென்றார். பின்னர் நிருபர்களிடம் பேசிய கயல் சந்திரன், ‘எங்கள் வீட்டில் மொத்தம் நான்கு பேரின் பெயர்கள் உள்ளன. ஆனால் அதில் எனக்கும், என் சகோதரருக்கும் மட்டும் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை. இது மிகவும் வருத்தமாக இருக்கிறது. வாக்காளர் பட்டியல் புதுப்பிப்பு மற்றும் சரிபார்ப்பு செயல்முறைகளில் உள்ள குறைகளை வெளிப்படுத்துவதாக பார்க்கப்படுகிறது. பொதுமக்கள் வாக்களிக்கும் உரிமையை இழக்காமல் இருக்க, தேர்தல் ஆணையம் மேலும் கவனம் செலுத்த வேண்டும்’ என்றார்.
