காலமுறை ஊதியம் வழங்க கோரி கரூரில் சத்துணவு ஊழியர் சங்கத்தினர் சாலை மறியல்

கரூர், பிப். 24: கரூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் கரூர் மாவட்ட கிளையை சேர்ந்த 126பேரை போலீசார் கைது செய்தனர். கரூர் தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க கரூர் மாவட்ட கிளையின் சார்பில் கோரிக்கை வலியுறுத்தி மாவட்ட பொருளாளர் தமிழ்மணி தலைமையில் சிறிது நேரம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, நூற்றுக்கணக்கான பெண்கள் கோரிக்கைகைளை நிறைவேற்றக் கூறி தாலுகா அலுவலகம் முன்பு திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 12 ஆண்கள், 114 பெண்கள் உட்பட 126பேரை டவுன் போலீசார் கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனர். இதனால், இந்த பகுதியில் நேற்று மதியம் வரை பரபரப்பு ஏற்பட்டது. காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். சட்டரீதியான ஒய்வூதியம் வழங்கிட வேண்டும். பணிக்கொடை ரூ. 5லட்சம் வழங்க வேண்டும். பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: