நெல்லை, ஏப்.22: வள்ளியூர் கன்கார்டியா பள்ளி அருகே சிலர் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா ெசய்வதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து வள்ளியூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பாப்பா தலைமையில் போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் அங்கு சென்று தீவிரமாக கண்காணித்தனர். இதில் அங்கு சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர் பட்டர்புரத்தை சேர்ந்த அருள் முத்துக்குமார் என்பதும், அவர் வைத்திருந்த பையில், வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்யும் பொருட்டு 5 லட்சம் ரூபாயை பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அப்பணத்தை அதிரடியாக பறிமுதல் செய்த நிலையான கண்காணிப்பு குழுவினர் சம்பந்தப்பட்ட வருவாய்த்துறையினர் வசம் ஒப்படைத்தனர். மேலும் இதுகுறித்து வள்ளியூர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
