ஸ்ரீவில்லிபுத்தூர், ஏப். 20: தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு, வருகிற 23ம் தேதி நடைபெற உள்ள நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வாக்காளர்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து தேர்தல் பார்வையாளர் உதயன் மிஸ்ரா நேற்று அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார். இதன்படி 15 வாக்குச்சாவடிகளை ஆய்வு செய்து வெப் கேமரா வசதி, குடிதண்ணீர் வசதி, சுகாதார வசதி, வாக்குச்சாவடிக்குள் வரும், வெளியே போகும் வழிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சறுக்குப்பாதை, கழிவறைகள், மின்விசிறி வசதிகள் அமைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து தீவிரமாக ஆய்வு செய்தார்.
பின்னர் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளில் அடுத்தகட்டமாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது நகரமைப்பு அலுவலர் வெங்கடேசன், வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார், ஸ்ரீவில்லிபுத்தூர் வருவாய் ஆய்வாளர் தங்கமாரிமுத்து, பிள்ளையார் குளம் வருவாய் ஆய்வாளர் வேல்மணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
