ஏரல், ஏப்.19: ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோயிலில் 118வது ஆண்டு குருபூஜை விழா நேற்று நடந்தது. இதில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை தரிசனம் செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோயில் பிரசித்தி பெற்றதாகும். இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் அமாவாசை அன்று பக்தர்கள் கோயிலில் காணிக்கையாக கொடுக்கும் அரிசி, காய்கனி, பொருட்களை கொண்டு அமாவாசை மறுநாள் சமைத்து குருபூஜை விழா நடத்தப்படும். இந்த ஆண்டு சித்திரை மாத அமாவாசை திருவிழா நேற்று முன்தினம் நடந்தது.
இதில் பக்தர்கள் கோயிலில் கொடுத்திருந்த அரிசி, காய்கனிகளை கொண்டு சமைத்து நேற்று அன்னமலை சிறப்பு தீபாராதனை நடத்தப்பட்டது. இதனை முன்னிட்டு சுவாமிக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு, சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பெட்டி சாப்பாடு வழங்கும் நிகழ்ச்சியை கோயில் பரம்பரை அக்தார் கருத்தப்பாண்டிய நாடார் துவக்கி வைத்தார். இவ்விழாவில் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை உட்பட பிற மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கார், வேன்களில் வந்திருந்து தாமிரபரணி ஆற்றில் நீராடி, சேர்மன் சுவாமியை தரிசனம் செய்து குருபூஜை விழாவில் பங்கேற்றனர். குருபூஜை விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு குடிநீர் உட்பட அனைத்து வசதிகளையும் கோயில் பரம்பரை அக்தார் கருத்தப்பாண்டிய நாடார் செய்திருந்தார்.
