லக்னோ: மும்பையில் உள்ள திரைப்பட இயக்குநர் ரோஹித் ஷெட்டியின் வீட்டில் துப்பாக்கி சூடு நடத்திய நபர் ஆக்ராவில் கைது செய்யப்பட்டார். கோல்மால், சிங்கம் போன்ற திரைப்பட தொடர்களை இயக்கிய ரோஹித் ஷெட்டி, ஷாருக்கான் நடித்த சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படம் மூலம் புகழ் பெற்றார். இவர் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள ஜூகு பகுதியில் 9 அடுக்குமாடி குடியிருப்பின் முதல் தளத்தில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த பிப்ரவரி 1ம் தேதி அதிகாலை மர்ம நபர்கள் சிலர் ரோஹித் ஷெட்டியின் வீட்டை குறி வைத்து துப்பாக்கி சூடு நடத்தினர். 4 முறை துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பியோடிய மர்ம நபர்கள் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.
இந்த சம்பவம் தொடர்பாக கார்வே நகர் மற்றும் தயாரி பகுதிகளை சேர்ந்த 4 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு நபரான நேற்று உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள சதாமி மத்தா என்ற இடத்தில் பிரதீப் குமார் என்பவர் கைது செய்யப்பட்டார்.
