செங்கோட்டை,ஏப்.10: கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக போட்டியிடும் கிருஷ்ணமுரளிக்கு ஆதரவாக சொக்கம்பட்டியில் பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பொதுமக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், ‘கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியில் மக்கள் ஒவ்வொருவரின் முகத்திலும் கிருஷ்ண முரளி அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்பது தெளிவாக தெரிகிறது. கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி, மக்கள் கொடுத்த உற்சாக வரவேற்பும் அவர்களின் பங்களிப்பும் நம் கூட்டணியின் வெற்றியை உறுதிப்படுத்த தயாராக உள்ளது. வளர்ச்சியும், மக்கள் நலனும் நோக்கமாகக் கொண்ட நமது அணிக்கு, கடையநல்லூர் மக்களின் முழு ஆதரவு கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தமிழ்நாட்டில் மின்சார கட்டணம் கடுமையாக உயர்ந்துள்ளது. கடையநல்லூர் தொகுதியில் கடந்த முறை 25 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் கிருஷ்ணமுரளி வெற்றி பெற்றார். பல்வேறு நெருக்கடிகளையும் தாண்டி தொகுதிக்காக பல்வேறு பணிகளை செய்துள்ளார். அவரது தந்தை செந்தூர்பாண்டியன் கடையநல்லூரை தனி தாலுகாவாக உருவாக்கியதுடன், அரசு கல்லூரி. ஐடிஐ போன்றவற்றை கொண்டு வந்துள்ளார். மக்கள் சக்தியுடன், நிச்சயமாக பிரம்மாண்ட வெற்றியை நோக்கி முன்னேறுவோம். கிருஷ்ணமுரளியுடன் இணைந்து நானும் இத்தொகுதியின் வளர்ச்சிக்காக பாடுபடுவேன் என்றார்.
கடையநல்லூர் தொகுதியில் கல்வியறிவு 85% வளர்ச்சி
கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி புன்னையாபுரம், சிங்கிலிபட்டி, சொக்கம்பட்டி திரிகூடபுரம், குமந்தாபுரம், கடையநல்லூர் பேட்டை பகுதிகளில் காலையிலும் கிளங்காடு ஆய்க்குடி கம்பளி, அகரகட்டு, இலத்தூர், சீவநல்லூர் பகுதிகளில் மாலையிலும் கிருஷ்ணமுரளி தீவிர பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் மக்கள் மத்தியில் பேசுகையில், ‘ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமானதாக கல்வி கருதப்படுகிறது. நான் எனது தந்தை வழியில் துவக்க பள்ளி, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளுக்கு பல வகுப்பறைகளை கட்டிக் கொடுத்துள்ளேன். கணிப்பொறி ஆய்வக உபகரணங்கள் நூல்கள் பள்ளிகளுக்கும் கல்வியில் நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளேன். கடந்த 5 ஆண்டுகளில் எனது சட்டமன்ற தொகுதி மக்களின் கல்வியறிவு சுமார் 85 சதவீதமாக வளர்ச்சி பெற்றுள்ளது. எனது தொகுதி வளர்ச்சி நிதியில் பெரும்பான்மை நிதியை பள்ளி, கல்லூரிகளுக்கு வழங்கியுள்ளேன். உங்களுக்கு மென்மேலும் பணியாற்ற எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய கேட்டுக்கொள்கிறேன்’ என்றார்.
