பயணிகள் அவதி காரைக்குடி ரயில்வே ஸ்டேஷனில் பீஸாய் போன கோச் எண் லைட் கண்டு கொள்ளுமா ரயில்வே நிர்வாகம்?

காரைக்குடி, பிப். 21:  காரைக்குடி ரயில்வே ஸ்டேஷனில் எக்ஸ்பிரஸ் ரயில் வரும் நேரங்களில் கோச் எண்கள் குறித்து விளக்க வைக்கப்பட்டுள்ள லைட் எரியாமல் உள்ளதால் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர். காரைக்குடியில் இருந்து திருச்சி - மானாமதுரை பயணிகள் ரயில் உள்பட பல்வேறு ரயில்கள் வந்து செல்கின்றன. தவிர பல்லவன் விரைவு ரயில், ரமேஸ்வரம் சென்னைக்கு  எக்ஸ்பிரஸ் ரயில், கோவை ராமேஸ்வரம் போன்ற எக்ஸ்ரயில்களும் இயக்கப்படுகிறது.  ரயில்களில் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செல்கின்றனர். எக்ஸ்பிரஸ் ரயிலில் செல்லும் பயணிகளின் வசதிக்காக முதல் பிளாட்பார்மில் கோச் எண்களை விளக்கக்கூடிய வகையில் 24 லைட்கள் வைக்கப்பட்டுள்ளன.

இதன்மூலம் பயணிகள் தாங்கள் செல்லவேண்டிய கோச்சை தெரிந்து கொண்டு தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பெட்டிகளில் ஏறுவதற்கு வசதியாக இருக்கும். ஆனால், இந்த லைட் பல மாதங்களாக எரியாமல் காட்சிப் பொருளாக உள்ளது. எனவே, ரயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சமூகஆர்வலர் பொறியாளர் இம்ரான்கான் கூறுகையில், `` ரயில் வந்தவுடன் கோச் எங்கு உள்ளது என தெரியாமல் பயணிகள் தடுமாறும் நிலை உள்ளது. முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் வருபவர்கள் கையில் லக்கேஜூடன் கோச்சை தேடி ஓட வேண்டிய நிலை உள்ளது. இதில் இடம் தெரியாமல் ஓடும் போது எதிர்எதிரே வருபவர்கள் மோதி கீழே விழும் சம்பவங்கள் நடந்து வருகிறது. இதன் மூலம் தவறி கீழே விழுந்து உயிர்பலி ஏற்பட வாய்ப்புள்ளது. பல மாதங்களாக கோச் எண்களை விளக்கும் லைட்கள் எரியாமல் உள்ளநிலையில் ரயில்வே நிர்வாகம் கண்டுகொள்ளாமல் மெத்தனமாக உள்ளது. இதேநிலை நீடித்தால் சமூக ஆர்வலர்களை ஒன்றுதிரட்டி போராட்டம் நடத்தப்படும்’’ என்று கூறினார்.

Related Stories: