புதுக்கோட்டை, பிப்.19: புதுக்கோட்டையில் உள்ள பிரசித்தி பெற்ற கோயிலான சாந்தநாதர் சுவாமி கோயில் வளாகத்தில் பிச்சை எடுப்பதற்காக அனுமதி அளிக்க பெண்ணொருவர் ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ குறித்து புதுக்கோட்டை நகர காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புதுக்கோட்டை கீழ ராஜவீதி அருகே இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான சாந்தநாதர் சுவாமி கோயில் அமைந்துள்ளது. புதுக்கோட்டையில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றாக திகழ்கிறது. நாள்தோறும் 500க்கும் மேற்பட்ட மக்கள் இங்கு வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம். அதேபோல் முக்கிய விசேஷ காலங்களில் இந்த கோயில் வளாகத்தில் உள்ள பல்லவன் குளத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்து தங்கள் முன்னோருக்கு திதி கொடுப்பதும் வழக்கமாக இருந்து வருகிறது.