க.பரமத்தி, பிப்.19: க.பரமத்தி ஒன்றிய பகுதிகளான சின்னதாராபுரம், புஞ்சைகாளகுறிச்சி, நஞ்சைகாளகுறிச்சி, தொக்குப்பட்டி, ராஜபுரம், தும்பிவாடி, விசுவநாதபுரி, அத்திப்பாளையம், மொஞ்சனூர், கார்வழி, அஞ்சூர், உள்ளிட்ட பகுதிகளில் சுமார் பல ஏக்கரில் பயிரிடப்பட்ட முதல்போக நெல் சாகுபடி அறுவடை பணிகளில், விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனால், சின்னதாராபுரம், அஞ்சூர் ஆகிய பகுதிகளில் தமிழக அரசின் தற்காலிக நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறந்து, விவசாயிகளிடம் நெல்லை கொள்முதல் செய்து வருகின்றனர். இந்தாண்டு ஜனவரி மாதம் வரை தொடர் மழையால், நெல் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு ஏக்கருக்கு 30 முதல் 35 மூட்டைகள் அறுவடை செய்து வந்த நிலையில், தற்போது மழை பாதிப்பால் சுமார் 18 முதல் 20 மூட்டைகள் வரை அறுவடை செய்வதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.