ஓட்டுக்கு பணம் கொடுப்பதற்கு எதிராக மயானத்தில் காளி பூஜை: சுயேச்சை வேட்பாளரால் பரபரப்பு

மதுரை: ஓட்டுக்கு பணம் கொடுக்கும் அரசியல்வாதிகளுக்கு எதிராக, மயான காளி கோயிலில் சுயேச்சை வேட்பாளர் பூஜை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை செல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் சமூக ஆர்வலர் சங்கரபாண்டியன். இவர், மதுரை வடக்கு தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட மனுச் செய்துள்ளார். இவர், சில நாட்களுக்கு முன் வெளியிட்ட போஸ்டர் பரபரப்பை கிளப்பியது. அதில், ‘‘தமிழ்நாட்டில் நடைபெற இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்காளர்ளுக்கு வாக்களிக்க பணம் வழங்கி ஜனநாயக படுகொலை செய்யும், ஊழல் அரசியல்வாதிகள் ரத்த வாந்தி எடுத்து தேர்தலில் தோல்வி அடைய வேண்டும்.

தமிழகத்தில் நடைபெற இருக்கும் தேர்தல் ஐனநாயக முறைப்படி நேர்மையாக நடைபெற வேண்டும் என்ற வேண்டுதலோடு மதுரை தத்தனேரி சுடுகாட்டு காளியிடம் சிறப்பு பூஜை செய்து வழிபாடு நிகழ்ச்சி நடைபெறும்” என தெரிவித்திருந்தார். இது தொடர்பாக அவரது சமூக வலைதளத்திலும் பதிவிட்டுள்ளார். இந்நிலையில் திட்டமிட்டபடி, பூஜை செய்ய நேற்று மயான காளி கோயிலுக்கு சென்றபோது, அங்கிருந்த போலீசார் அவரை தடுத்துள்ளனர். பின்னர் போலீசார் அனுமதியுடன் மயான காளி கோயிலில் தனது வேண்டுதலை கூறி விளக்கு ஏற்றி சிறப்பு பூஜை செய்து காளியை வழிபட்டுள்ளார். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: