அசூரபல பஞ்சாப்புடன் மோதல்: சொந்த ஊரில் வெற்றி கணக்கை தொடங்குமா கேகேஆர்?

கொல்கத்தா: ஐபிஎல் தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெறும் 12வது லீக் போட்டியில் முன்னாள் சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-பஞ்சாப் கிங்ஸ் மோதுகின்றன. முதல் போட்டியில் மும்பை, 2வது போட்டியில் சொந்த மண்ணில் ஐதராபாத்திடம் தோல்வி அடைந்த கேகேஆர் இன்று வெற்றி கணக்கை தொடங்க வேண்டிய நெருக்கடியில் உள்ளது.பேட்டிங்கில் ரகானே, ரகுவன்ஷி, ரிங்கு சிங், ஆலென் சிறப்பாக ஆடுகின்றனர். ஆனால் ரூ.25.20 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட கேமரூன் கிரீன் 2 போட்டியிலும் ரன் அடிக்கவில்லை. பவுலிங்கும் சொல்லிக்கொள்ளும் வகையில் இல்லை. சுழலில் வருண் சக்ரவர்த்தி, சுனில் நரேன் ரன்களை வாரி வழங்குகின்றனர்.

மறுபுறம் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அசுர பலத்தில் உள்ளது. பேட்டிங்கில் பிரியான்ஷ், சிம்ரன்சிங், கனோலி அதிரடியில் மிரட்டி வருகின்றனர். பவுலிங்கில் அர்ஷ்தீப் சிங், வைஷாக், ஜான்சன், சுழலில் சாஹல் கலக்கி வருகின்றனர். ஹாட்ரிக் வெற்றி முனைப்பில் பஞ்சாப் களம் இறங்குகிறது. இதனிடையே கொல்கத்தாவில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்றும் மழை பெய்ததால் கேகேஆர் வீரர்களின் பயிற்சி பாதிக்கப்பட்டது. இன்றும் போட்டி நடைபெறும் நேரத்தில் 50 சதவீதம் மழைக்கு வாய்ப்பு உள்ளது. இதனால் போட்டி பாதிக்கப்படலாம். இரு அணிகளும் இதற்கு முன் 35 முறை மோதி உள்ளன. இதில் 21ல் கேகேஆர், 13ல் பஞ்சாப் வென்றுள்ளன. ஒரு போட்டி கைவிடப்பட்டுள்ளது.

Related Stories: