ஆலத்தூரில் வாகன சோதனையை தீவிரமாக்க வேண்டும் பெரம்பலூர் எஸ்.பி உத்தரவு

பாடாலூர், ஏப்.6: ஆலத்தூரில் வாகன சோதனையை தீவிரமாக்க வேண்டும் என எஸ்பி பிரபாகர் தெரிவித்தார். 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடி மையங்கள் மற்றும் தேர்தல் பணிக்காக அமைக்கப்பட்ட சோதனைச் சாவடியை பெரம்பலூர் போலீஸ் எஸ்.பி பிரபாகர் நேரில் பார்வையிட்டார். அப்போது ஆலத்தூர் வாகன சோதனைகளை தீவிரமாக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகாவில் உள்ள ஆலத்தூர்கேட், இரூர் ஆகிய கிராமங்களில் உள்ள வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள், பொதுமக்கள் வசதிகள், காவல்துறையினரின் பணிப்பகிர்வு உள்ளிட்ட அம்சங்களை ஆய்வு செய்தார். அப்போது ஆலத்தூர்கேட் பகுதியில் உள்ள சோதனை சாவடியில் பணிபுரியும் காவல்துறையினரின் செயல்பாடுகளை மதிப்பீடு செய்தார்.

அப்போது, அவர், தேர்தல் நேரத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கை உறுதிப்படுத்தும் வகையில் வாகன சோதனைகளை தீவிரமாக மேற்கொள்ளவும், சந்தேகத்திற்கிடமான நபர்கள் மற்றும் பொருட்கள் குறித்து விழிப்புடன் இருக்கவும் காவலர்களுக்கு அறிவுறுத்தினார். அதனைத் தொடர்ந்து, பணியில் ஒழுங்கு, மரியாதை மற்றும் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

பொதுமக்களுக்கு எந்தவித சிரமமும் இல்லாத வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும். தேர்தல் நடைபெறும் நாளில் அமைதியான மற்றும் சீரான வாக்குப்பதிவு நடைபெற அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் என்றார். மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவின் கூடுதல் எஸ்.பி. பாலமுருகன், பெரம்பலூர் டி.எஸ்.பி ரவிச்சந்திரன், இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் உள்பட போலீஸார்கள் உடனிருந்தனர்.

 

Related Stories: