பழநி, பிப். 19: பழநியில் மயானத்திற்கு செல்ல சான்று தர மறுக்கப்பட்டதால் இறந்தவர் உடலுடன் உறவினர்கள் விஏஓ அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பழநி டவுன், இந்திரா நகரை சேர்ந்தவர் தன்னாசி (65). பழநி நகராட்சியில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். நீண்ட நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த இவர், நேற்று அதிகாலை உயிரிழந்தார். பழநியில் மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெறுவதால் இறந்தவர்கள் உடலை உடனடியாக எடுக்க வேண்டிய சம்பிராதாயம் உள்ளது. ஆனால் நேற்று பழநி புறநகர், சிவகிரிப்பட்டி எரிவாயு மயானத்தில் அதிகளவு உடல்களை எரிக்க புக்காகி இருந்தது. இதனால் தன்னாசியின் உடலை திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் உள்ள மின்மயானத்தில் எரிக்க முடிவு செய்து, அதற்கு மாலை 5 மணிக்கு நேரம் ஒதுக்கி தரப்பட்டிருந்தது. மருத்துவமனையில் இறந்தால் மருத்துவ சான்றும், வீடுகளில் இருந்தால் இயற்கை மரணம் என விஏஓ சான்றும் மயானத்தில் வழங்க வேண்டும். தன்னாசிக்கான சான்று வாங்குவதற்கு அவரது உறவினர்கள் பழநி டவுன் விஏஓ அலுவலகத்திற்கு சென்றுள்ளனர்.