சேலம், பிப்.18: சேலம் மாவட்டத்தில் குறைந்த பட்ச ஆதார விலையில் பச்சைப்பயிறு மற்றும் உளுந்து கொள்முதல் செய்யப்படுகிறது. இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் ராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:பச்சைப்பயிறு மற்றும் உளுந்து சாகுபடி செய்த விவசாயிகள் பயன்பெறும் வகையில், மத்திய அரசின் நாஃபெட் நிறுவனம் மூலம் கொள்முதல் செய்யப்படவுள்ளது. சேலம் மாவட்டத்தில் 150 மெட்ரிக் டன் பச்சைப்பயிறும், 20 மெட்ரிக் டன் உளுந்தும் கொள்முதல் செய்யப்படவுள்ளது. இதற்கு, சேலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் முதன்மை கொள்முதல் மையமாக செயல்படவுள்ளது. இம்மையத்தில் பச்சைப்பயிறு கிலோ ₹71.96-க்கும், உளுந்து கிலோ ₹60-க்கும், வரும் ஏப்ரல் 18ம் தேதி வரை கொள்முதல் செய்யப்படவுள்ளது. விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் பச்சைப்பயிறு மற்றும் உளுந்துக்கான கிரையத்தொகை, விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படும்.