ஒட்டன்சத்திரம், பிப். 18: ஒட்டன்சத்திரத்தில் கடந்த 2007ம் ஆண்டு மாவட்ட உரிமையியல் நீதிமன்றமும், 2010ம் ஆண்டு குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அமைய பெற்று இயங்கி வருகிறது. இந்நிலையில் ஒட்டன்சத்திரம் பொதுமக்கள், வழக்கறிஞர்கள் சார்பாக விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் ஒட்டன்சத்திரத்தில் சார்பு நீதிமன்றம் அமைக்க தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இது பிறப்பித்து 2 ஆண்டுகள் கடந்த பிறகும் சார்பு நீதிமன்றம் அமைப்பதற்கான எந்த ஏற்பாடுகளையும் தமிழக அரசு இதுவரை செய்யாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது சட்டமன்ற தேர்தலையொட்டி தமிழக அரசு ஒட்டன்சத்திரம், நாகணம்பட்டி சாலையில் இயங்கி வரும் வேளாண்மை விளைபொருள் விற்பனை அங்காடி வளாகத்தில் ஏற்கனவே இயங்கி கொண்டிருக்க கூடிய குற்றவியல் நடுவர் நீதிமன்றம், மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்திற்கு அருகில் அமைந்திருக்கும் ஒரு ஆஸ்பெட்டாஸ் கூரையால் வேயப்பட்டுள்ள பாதுகாப்பற்ற, ஓட்டை உடைசல் ஆக உள்ள ஒரு கட்டிடத்தில் சார்பு நீதிமன்றத்தை திறப்பதற்காக பணிகளை அவசர கதியில் செய்து வருகிறது.