தென்காசி, பிப்.17: தென்காசியில் நாளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கும் மகளிர் மாநாடு நடைபெறும் இடத்தை அமைச்சர், அதிமுக நிர்வாகிகள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது,தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி 6வது கட்ட தேர்தல் சுற்றுப்பயணமாக நாளை (17ம்தேதி) தூத்துக்குடியிலும், 18ம்தேதி நெல்லை, தென்காசி தெற்கு மாவட்டத்திலும், 19ம்தேதி தென்காசி வடக்கு மாவட்டத்திலும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்கள். முதல்வரை வரவேற்கும் வகையில் ஆய்வுக்கூட்டம், ஆலோசனை கூட்டங்கள் நடந்தது. நெல்லை மாவட்டத்தில் அமைச்சர் ராஜலட்சுமி, மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா வழிகாட்டுதல்படியும், தென்காசி தெற்கு மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் இசக்கிசுப்பையா வழிகாட்டுதல்படி மாவட்ட செயலாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்எல்ஏ தலைமையில் 3இடங்களில் மாநாடுகள் நடத்தப்படுகிறது. மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் சத்யன் வழிகாட்டுதலின்படி அணிவகுப்பு நடைபெறுகிறது. மேலும் இளைஞர், இளம்பெண்கள் பாசறை, மகளிர் குழுவினரை முதல்வர் சந்திக்கிறார். தென்காசி இசக்கி மஹாலில் மகளிர் மாநாடு நடக்கிறது. 3வதுநாள் 19ம்தேதி தென்காசி வடக்கு மாவட்டத்தில் கடையநல்லூர், சங்கரன்கோவில் தொகுதிகளில் மாவட்ட செயலாளர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா வழிகாட்டுதலின்படி நடைபெறும் நிகழ்ச்சிகளில் முதல்வர் கலந்து கொள்கிறார் என்றார்.