பெரியகுளம், பிப். 17: பெரியகுளம் பகுதியில் முதல்போக நெல் அறுவடை தீவிரமாகியுள்ள நிலையில், தற்காலிக கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. தொடர்மழையால் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கொள்முதல் விலையை உயர்த்த கோரிக்கை விடுத்துள்ளனர்.தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள மேல்மங்கலம், தாமரைக்குளம், பொம்மிநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்ட முதல்போக நெல் சாகுபடி அறுவடை பணிகளில், விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனால், மேல்மங்கலம் பகுதியில் தமிழக அரசின் தற்காலிக நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறந்து, விவசாயிகளிடம் நெல்லை கொள்முதல் செய்து வருகின்றனர். இந்தாண்டு ஜன.15 வரை தொடர்மழையால், நெல் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு ஏக்கருக்கு 30 முதல் 35 மூட்டைகள் அறுவடை செய்து வந்த நிலையில், தற்போது மழை பாதிப்பால் 18 முதல் 20 மூட்டைகள் வரை அறுவடை செய்வதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும், வருடந்தோறும் மத்திய அரசின் சார்பில் ஒரு கிலோ நெல்லுக்கு 50 பைசா விலை உயர்த்தி வருகின்றனர்.