சாயல்குடி, பிப்.17: ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் மீண்டும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 2019 ஜன.1 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதில் முதற்கட்டமாக கடைகளில் பயன்பாட்டிலுள்ள 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. வருவாய்துறை, உள்ளாட்சிதுறையினர் பறிமுதல் செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டனர். அந்தாண்டு மட்டும் விறுவிறுப்பாக நடந்த பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கைகள் தற்போது கிடப்பில் போடப்பட்டதால் ராமநாதபுரம் மாவட்டத்தில் மீண்டும் பிளாஸ்டிக் பொருட்கள் புழக்கத்தில் வந்து விட்டது. ராமநாதபுரம், பரமக்குடி, கீழக்கரை ஆகிய நகராட்சி பகுதிகள், முதுகுளத்தூர், கமுதி, சாயல்குடி, உள்ளிட்ட பேரூராட்சி பகுதிகள் மற்றும் கடலாடி, நரிப்பையூர் போன்ற ஊராக பகுதிகள், திருஉத்திரகோசமங்கை, திருப்புல்லாணி, ஏர்வாடி, திருவாடானை போன்ற கோயில் சுற்றுலா தலம் உள்ள பகுதிகளில் மீண்டும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டில் உள்ளதாக புகார் எழுந்துள்ளது.