மதுரை, பிப்.17: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் வருவாய்துறையினர் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்தல், வருவாய்த்துறை அலுவலர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம். பணியில் இருக்கும் போது அரசு ஊழியர்கள் இறந்தால் ரூபாய் 10 லட்சம் குடும்ப நிவாரண நிதி வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் பல்வேறு கட்ட போராட்டம் நடத்தினர். ஆனால் அரசு பேச்சு வார்த்தைக்கு அழைக்கவில்லை. இதனால் இன்று முதல் இத்துறையினர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் முருகையன் அறிக்கையில், ‘‘வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் காலவரையற்ற போராட்டத்தின் காரணமாக தற்போது நடைபெற்று வரும் 2021 தமிழக சட்டமன்ற தேர்தல் தொடர்பான மாவட்ட அளவிலான பயிற்சி வகுப்புகளை ஒத்திவைக்க மாநில முதன்மை தேர்தல் அலுவலர் அவர்களிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. எனவே அனைத்து வருவாய்த்துறை அலுவலர்களும் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் பங்கு கொள்ளவும். தேர்தல் பயிற்சியில் பங்கேற்க வேண்டியது இல்லை’’ என தெரிவித்துள்ளார்