“அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆரியற்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலாரூரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் நம்மை அளித்துக் காப்பான்’’
“ஸர்வ கல்யாண தாதாரம் ஸர்வாபத் கநவாரகம்
அபார கருணாமூர்த்திம் ஆஞ்ஜநேயம் நமாம்யஹம்”
எல்லா உலகங்களுக்கும் நாயகனாக விளங்கும் அருள்மிகு கோதண்டராமர் சீதாதேவி இலக்குமணருடன் அருள்தரும் ருக்மணி சத்யபாமா ஸ்ரீ வேணுகோபாலருடன் குடிகொண்டுள்ள திருத்தலங்கள் தொண்டை நாட்டில் பல உள்ளன. அவற்றில் சிறப்பு வாய்ந்தது சென்னை நங்கநல்லூர், ராம்நகரில் அமைந்துள்ள, தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை ஆளுகைக்குட்பட்ட, “அருள்மிகு ஆதிவ்யாதிஹர பக்த ஆஞ்சநேயர்’’ கோயில் உள்ளது. ஆஞ்சநேயஸ்வாமி விஸ்வரூப தரிசனமாக பக்தர்களுக்கு காட்சி தருவது இத்திருத்தலத்தில் மட்டுமே உள்ள சிறப்பம்சமாகும்.ஸ்ரீராம ரக்க்ஷை மற்றும் பூர்ண வடைமாலை தரிசனத்திற்கு சிறப்பு வாய்ந்த இத்திருக்கோயிலில், ஸ்ரீராம நவமி விழா வழக்கம்போல் இவ்வாண்டும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இத்தருணத்தில் அருள் வழங்கும் அருள்மிகு கோதண்டராம சுவாமிக்கு இலட்சார்ச்சனையும், சிறப்பு யாகமும் பங்குனி மாதம் 6ம் நாள் 20.03.2026 வெள்ளிக் கிழமை முதல் பங்குனி மாதம் 15ம் நாள் 29.03.2026 ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெற உள்ளது.
உலகம் நன்மை பெறவேண்டி, அருள்மிகு கோதண்டராம சுவாமிக்கு நடைபெற உள்ள இலட்சார்ச்சனை சிறப்பு யாகங்களிலும், சந்தனக்காப்பு (21.03.2026) அலங்காரத்திலும் பால் அபிஷேகத்திலும் (22.03.2026), ஸ்ரீ சீதாராம திருக்கல்யாணம் (22.03.2026) உற்சவத்திலும், (27.03.2026) வெள்ளிக்கிழமை சிறப்பு திருமஞ்சனம், மஹா பூர்ணாஹுதி, யாத்ராதானம், கடம் புறப்பாடு, கலசாபிஷேகம், சிறப்பு மலர்களினால் அலங்காரம் ஆகியவை நடைபெறும். மேலும், (29.03.2026) ஞாயிறு அன்று மாலை 7.00 மணிக்கு இலட்சார்ச்சனை பூர்த்தியுடன், சிறப்பு அலங்காரத்துடன் சுவாமி புறப்பாடு நடை பெறும்.பக்தர்கள் அனைவரும் வருகை புரிந்து, விழாவில் கலந்து கொண்டு இறையருள் பெற்று, இன்புற்று வாழ அன்புடன் வேண்டுகிறோம்.
