திருச்சி, பிப். 16: தமிழகத்தில் நடைபெறவுள்ள 2021 சட்டமன்ற பொது தேர்தலை எதிர்கொள்வது குறித்து திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பயிற்சி பட்டறை, திருச்சியில் நடந்தது. திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக மண்டல பொறுப்பாளரும், மின்சாரத்துறை அமைச்சருமான தங்கமணி வழிகாட்டுதலின்படி அதிமுக புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் தலைமையில் தனியார் தகவல் தொழில்நுட்ப மென்பொருள் நிறுவனங்களை சேர்ந்த வல்லுனர் குழுவினரால் பயிற்சி பட்டறை நடத்தப்பட்டது. இதில் தகவல் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவம், தேவை, தொழில்நுட்பத்தை கையாள்வது, தமிழக அரசின் சாதனை திட்டங்களை மக்களிடம் எவ்வாறு கொண்டு செல்வது, தொழில்நுட்பம் சார்ந்த புதுப்பிக்கப்பட்ட கணினி மென்பொருட்கள் கையாள்வது குறித்து எடுத்துரைக்கப்பட்டது.முன்னதாக நடந்த கலந்தாய்வு கூட்டத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தலை தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்த ஆலோசனையை அதிமுக புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் குமார் வழங்கினார்.