குன்னூர், மார்ச் 20: குன்னூரில் பெரிய லாக்கருடன் வந்த நகைக்கடை வாகனத்தை தேர்தல் பறக்கும் படையினர் மடக்கி பிடித்தனர். லாக்கரை திறந்தபோது 5 கிராம் நகை மட்டுமே இருந்ததால் அதிகாரிகள் ஏமாற்றம் அடைந்தனர். தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. உரிய ஆவணங்களின்றி 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் வாக்காளர்களுக்கு வழங்க கொண்டு செல்லப்படும் பரிசுப் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர். அந்த வகையில் குன்னூர் மலைப்பாதையில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று முன்தினம் இரவில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, கேரளாவிலிருந்து ஊட்டி நோக்கி ஒரு தனியார் நகைக்கடைக்குச் சொந்தமான வாகனம் வந்தது. அதனை அதிகாரிகள் மடக்கி நிறுத்தி விசாரித்தனர். அந்த வாகனத்தில் ஒரு பெரிய லாக்கர் இருப்பதைப் பார்த்த பறக்கும் படை அதிகாரிகள் சந்தேகத்தின் அடிப்படையில் அதனை சோதனை செய்ய நினைத்தனர். எனவே, அதிகாரிகள் அந்த லாக்கரைத் திறந்து காட்டும்படி வாகனத்தில் வந்த ஊழியர்களிடம் கூறினர்.
ஆனால் அந்த ஊழியர், ‘‘எங்களிடம் சாவி இல்லை, மேலாளர் வந்தால் மட்டுமே லாக்கரை திறக்க முடியும்’’ என்றார். மேலும் அவரிடம் லாக்கரை கொண்டு செல்வதற்கான உரிய ஆவணங்களும் இல்லை. இதனால் பறக்கும் படை அதிகாரிகளுக்கு சந்தேகம் அதிகரித்தது. அந்த வாகனத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் இருக்கலாம் என அதிகாரிகள் உறுதியாக நம்பினர். உரிய ஆவணங்களும் இல்லாததால் உடனடியாக அந்த வாகனத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பின்னர், அந்த வாகனம் குன்னூரில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. நகைக்கடை மேலாளருக்கும் இது தொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஊட்டியில் இருந்து லாக்கர் சாவியுடன் நகைக்கடை மேலாளர் வந்தார். இதையடுத்து சார் ஆட்சியர் சங்கீதா முன்னிலையில் அந்த லாக்கர் திறக்கப்பட்டது. ஆனால் லாக்கரில் பெரிய அளவில் நகைகள் இருக்கும் என எதிர்பார்த்து நின்றிருந்த அதிகாரிகளுக்கு பெரும் ஏமாற்றமே மிஞ்சியது. அந்த பெரிய லாக்கருக்குள் வெறும் 5 கிராம் எடையுள்ள நகை மட்டுமே இருந்தது.
தொடர்ந்து அதற்கான முறையான ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட்டன. ஆவணங்கள் சரியாக இருந்ததாலும், குறைந்த அளவே நகை இருந்ததாலும் அந்த வாகனத்தை அதிகாரிகள் மீண்டும் அவர்களிடமே ஒப்படைத்தனர். பெரும் நகை வேட்டை என நினைத்துத் தணிக்கை செய்த அதிகாரிகளுக்கு இந்தச் சம்பவம் பெரும் ஏமாற்றத்தை அளித்தது. இந்த சம்பவம் குன்னூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
