சட்டமன்ற தேர்தல் எதிரொலி; வங்கிகளில் பணம் எடுக்க கட்டுப்பாடு ரூ.2 லட்சம் வரை மட்டுமே ரொக்கம்

தமிழகம், கேரளா, அசாம், மேற்குவங்கம், புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இன்னும் ஒரு சில தினங்களில் தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது. தேர்தலை முன்னிட்டு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும், துணை ராணுவம் பாதுகாப்பிற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளில், வாடிக்கையாளர்கள் ரொக்கப்பணமாக எடுக்க வங்கிகள் சீலிங் வைத்துள்ளது. இதன்படி ஒரு வாடிக்கையாளர், ஒரு நாளைக்கு ரூ.2 லட்சம் வரை மட்டுமே ரொக்கமாக பணம் எடுக்க இயலும். அந்த ரூபாய் நோட்டுக்கள் அனைத்தும் ரூ.100 ஆக மட்டுமே வழங்கப்படும். மேலும், ரூ.500 கட்டுக்கள் வழங்கப்படாது என வங்கி ஊழியர்கள் வாடிக்கையாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டத்தில் மட்டும் உள்ள 9 பொதுத்துறை நிறுவனங்களை சேர்ந்த 50 வங்கிகளில், தினமும் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் பரிவர்த்தனை நடைபெறும். இதனால் வங்கிகளுக்கு சென்று ரொக்கமாக பணம் எடுக்க சென்ற வாடிக்கையாளர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர். இன்னும் தேர்தல் தேதியே அறிவிக்காத நிலையில், வங்கிகள் அதற்குள் கெடுபிடியாக நடந்து கொள்வதால், தங்களது தொழில் பாதிக்கப்படும் என வாடிக்கையாளர்கள் புலம்புகின்றனர். தேர்தல் நேரத்தில், பணப்பட்டுவாடாவை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் வங்கிகள் இதுபோன்று கெடுபிடி விதித்துள்ளதாக வங்கியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: