களக்காடு, பிப்.11: களக்காட்டில் காங்கிரஸ் சார்பில் மத்திய அரசின் வேளாண்மை சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும், டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதாக புகார் தெரிவித்தும், அதனை கண்டித்தும் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில காங்கிரஸ் பொருளாளர் ரூபிமனோகரன் தலைமை வகித்தார். முன்னாள் மத்திய மந்திரி தணுஷ்கோடி ஆதித்தன், நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தனர். இதில் முன்னாள் மாவட்ட தலைவர் தமிழ்செல்வன், முன்னாள் வர்த்தக காங்கிரஸ் மாவட்ட தலைவர் சந்திரசேகர், ஜெபஸ்டின் ராஜ், வட்டார தலைவர் அலெக்ஸ், நகர தலைவர் ஜார்ஜ்வில்சன், முன்னாள் வட்டார தலைவர் காளபெருமாள், முத்துராஜ் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர். வேளாண்மை சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தியும், டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்தும், மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கோஷங்கள் எழுப்பினர். மேலும் டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் உயிரிழந்த விவசாயிகளுக்கு மவுன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.