குட்கா கடத்திய 2 பேர் கைது

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை - திருவள்ளூர் சாலை பாலாஜி நகர் பகுதியில் 2 கார்களில் குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் இருப்பதாக மாவட்ட எஸ்.பி. அரவிந்தனுக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில், ஊத்துக்கோட்டை டிஎஸ்பி சாரதி தலைமையில் இன்ஸ்பெக்டர் குமார், எஸ்.ஐக்கள் ராக்கிகுமாரி, கோவிந்தன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு நின்றிருந்த கார்களில் சோதனை நடத்தினர். அப்போது, அந்த கார்களில் ஹன்ஸ், குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் இருப்பது தெரியவந்தது.  மேலும், அந்த கார்கள்  யாருக்கு சொந்தமானவை என போலீசார் விசாரித்ததில் அவை, அதே பகுதியில் வசிக்கும் சித்ரா ராம்(24)  என்பவருடையது என தெரியவந்தது.  மேலும், அவரை போலீசார் விசாரித்ததில் குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இருந்து கொண்டு வரப்பட்டது தெரியவந்தது.

அவற்றை பறிமுதல் செய்து சித்ரா ராம் மற்றும் அவரது  உறவினர் லட்சுமணன்(29)  என்பவரை கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட குட்காவின் மதிப்பு காருடன் சேர்த்து ₹50 லட்சம் என கூறப்படுகிறது.

Related Stories: