சென்னை: அரசுத் துறை ஊழியர்களுக்கு இணையாக பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்களுக்கும் ஊதிய உயர்வு வழங்க அரசின் ஒப்புதல் கட்டாயம் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் அரசு ரப்பர் கழகத்தில் பணியாற்றிய சண்முகம் என்ற ஊழியர் அரசுத் துறை ஊழியர்களுக்கு இணையாக ஊதிய உயர்வு வழங்கக் கோரி தாக்கல் செய்திருந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, மனுதாரருக்கும் அரசுத் துறை ஊழியர்களை போல ஊதிய உயர்வு வழங்குவது தொடர்பாக தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சி.குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு அரசு துறை ஊழியர்களுக்கு இணையாக ஊதிய உயர்வு வழங்கக் வேண்டும் என்று விதிகள் இருந்தாலும், அதற்கு அரசின் ஒப்புதல் கட்டாயம் என்று அந்த விதிகளில் வலியுறுத்தப்பட்டுள்ளது. சம வேலைக்கு சம ஊதியம் என்பதை பொறுத்தவரை அரசு மற்றும் பொதுத்துறை ஊழியர்களை ஒப்பிட்டு பார்க்க முடியாது என்று கூறி தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை ஏற்று, தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.
