பாலக்காடு அருகே ஊருக்குள் புகுந்த காட்டு யானை

 

பாலக்காடு: பாலக்காடு அருகே காட்டு யானை ஊருக்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், நெல்லியாம்பதி டீ எஸ்டேட் தோட்டத் தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியில் சில்லிக்கொம்பன் என்கிற காட்டுயானை நேற்று இரவு ஊருக்குள் புகுந்து அங்குள்ள ரேஷன் கடையை சூறையாட முயன்றது. இதனைப்பார்த்த அப்பகுதியிலுள்ள மக்கள் வீட்டைவிட்டு வெளியே நடமாட முடியாமல் அச்சம் அடைந்தனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதித்தது. பாலக்காடு மாவட்டத்தில் நெல்லியாம்பதி உட்பட வனப்பகுதிகளில் கடுமையான வறட்சி நிலவி வருகின்றது.

இதனால் வனவிலங்குகளான காட்டுயானை, சிறுத்தை, கரடி, மான்கள், காட்டுப்பன்றிகள், குரங்குகள் ஆகியவை உணவு மற்றும் தண்ணீர்தேடி மக்கள் வசிக்கின்ற பகுதிகளுக்குள் புகுந்து அங்கு தொழிலாளர்கள் பயிர்செய்துள்ள வாழை, தென்னை, பாக்கு போன்ற பயிர்களை சேதப்படுத்திவிட்டு செல்கின்றன. இதேபோல் உணவு தேடி ஊருக்குள் புகுந்த யானையை பொதுமக்கள் வனத்துறையினர் உதவியுடன் வனத்திற்குள் விரட்டினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 

Related Stories: