தி.பூண்டியில் கோழி வளர்ப்பு திட்டத்தில் பெண் பயனாளிகளுக்கு கோழிக்குஞ்சுகள் வழங்கல்

திருத்துறைப்பூண்டி, பிப்.10: திருத்துறைப்பூண்டி கால்நடை மருத்துவமனையில் அரசு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் புறக்கடை கோழி வளர்ப்பு திட்டத்தின் கீழ் மகளிர் முன்னேற்றம், கிராம பொருளாதார மேம்பாடு அடையும் வகையில் கோழி வளர்ப்பு திட்டம் கடந்த 5 ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் இந்த ஆண்டு திருத்துறைப்பூண்டி ஒன்றியத்தில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள 400 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் ஒவ்வொருவருக்கும் நான்கு வார வயதுடைய ரூ.75 மதிப்புடைய அசில் இன கோழிக்குஞ்சுகள் 25 வழங்கப்படுகிறது. திருத்துறைப்பூண்டியில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் டாக்டர் தனபாலன் முன்னிலையில் உதவி இயக்குனர் ஜான்சன் சார்லஸ் பயனாளிகளுக்கு அசில் இன கோழிக்குஞ்சுகள் வழங்கினார். இதில் கால்நடை மருத்துவமனை மருத்துவர் ராமலிங்கம், கால்நடை உதவி மருத்துவர்கள் விஸ்வேந்தர், சந்திரன், கோவிந்தராஜ் மற்றும் கால்நடை துறை ஊழியர்கள், பணியாளர்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் கோழிக்குஞ்சுகள் வளர்ப்பது, பணிகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

Related Stories: