கோவை, பிப்.10: கோவை ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தையில் வியாபாரம் செய்ய அதிகாரிகள் மறுப்பு தெரிவித்ததால் தடையை மீறி கலெக்டர் பங்களாவை முற்றுகையிட சென்ற விவசாயிகளால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை ஆர்.எஸ்.புரத்தில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான விவசாயிகள் காய்கறிகளை விற்பனை செய்து வருகின்றனர். உள்ளூர் விவசாயிகளுக்கு முழு உரிமை என்ற அடிப்படையில் கோவையை சுற்று வட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் மட்டுமே காய்கறிகள் விற்பனை செய்யலாம் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால் உத்தரவை மீறி நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்து வந்தனர். இதற்கு ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதுடன் கடை அமைக்ககூடாது என எச்சரிக்கை விடுத்தனர்.