கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி அடுத்த வள்ளலார் நகரை சேர்ந்தவர் செல்லத்துரை (63). இவர், நேற்று மதியம் தனது வீட்டின் பின்புறம் உள்ள தென்னை மரத்தில் இளநீர் பறிக்க, 2வது மாடிக்கு சென்றுள்ளார். பின்னர், ஒரு கம்புடன் மரத்தில் ஏறி, இளநீரை பறிக்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்ததில் செல்லத்துரையின் கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அலறி கூச்சலிட்டார்.
சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இரவில் உயிரிழந்தார். தகவலறிந்ததும் கூடுவாஞ்சேரி போலீசார் மருத்துவமனக்கு சென்று, செல்லத்துரையின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
