×

ரஞ்சி கோப்பை பைனல் தோல்வியை தவிர்க்க கர்நாடகா போராட்டம்: ஜம்மு காஷ்மீர் 364 ரன்கள் முன்னிலை

ஹுப்பாலி: ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியின் 3ம் நாளில் கர்நாடகா அணி, 5 விக்கெட் இழப்புக்கு 220 ரன் எடுத்து தோல்வியை தவிர்க்க போராடிக் கொண்டிருந்தது. ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டி கர்நாடகாவின் ஹுப்பாலி நகரில் கடந்த 24ம் தேதி துவங்கியது. இப்போட்டியில் ஜம்மு காஷ்மீர், கர்நாடகா அணிகள் மோதி வருகின்றன. முதலில் ஆடிய ஜம்மு காஷ்மீர் அணி முதல் இன்னிங்சில், 2ம் நாள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 527 ரன் எடுத்திருந்தது.

இந்நிலையில் 3ம் நாளான நேற்று முதல் இன்னிங்சை அந்த அணி தொடர்ந்தது. 173.1 ஓவரில் அந்த அணி 584 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. அதையடுத்து, முதல் இன்னிங்சை கர்நாடகா அணி துவக்கியது. அந்த அணியின் துவக்க வீரர் கே.எல்.ராகுல் 13 ரன்னில் வீழ்ந்து அதிர்ச்சி தந்தார். பின் வந்த வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தபோதும், மற்றொரு துவக்க வீரர் மயங்க் அகர்வால் நங்கூரமிட்டது போல் நிலைத்து ஆடி சதம் கடந்தார்.

கர்நாடகா அணியின் கேப்டன் தேவ்தத் படிக்கல் 11, கருண் நாயர் 0, ஸ்மரன் ரவிச்சந்திரன் 0, ஷ்ரேயாஸ் கோபால் 27 ரன்னில் அவுட்டாகினர். நேற்றைய ஆட்ட நேர முடிவில் கர்நாடகா அணி, 69 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 220 ரன் எடுத்து, 364 ரன்கள் பின்தங்கி தோல்வியை தவிர்க்க போராடிக் கொண்டிருந்தது. மயங்க் அகர்வால் 130, கிருதிக் கிருஷ்ணா 27 ரன்னுடன் களத்தில் இருந்தனர். ஜம்மு காஷ்மீர் தரப்பில் அகிப் நபி தர் 3 விக்கெட் வீழ்த்தினார். 4ம் நாளான இன்று, கர்நாடகா அணி, முதல் இன்னிங்சை தொடர உள்ளது.

Tags : Karnataka ,Ranji Trophy ,Jammu and ,Kashmir ,Hubballi ,Ranji Trophy final ,Hubballi, Karnataka.… ,
× RELATED டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்று:...