பணகுடி, பிப். 9: வள்ளியூர் அரசு மருத்துவமனையில் காச நோய் கண்டறியும் நவீன மருத்துவ கருவியின் சேவையை இன்பதுரை எம்எல்ஏ துவக்கிவைத்தார். நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியை தொடர்ந்து வள்ளியூர் அரசு மருத்துவமனையில் காச நோயை கண்டறியும் நவீன மருத்துவக் கருவியின் சேவை துவக்க விழா நடந்தது. தலைமை வகித்த இன்பதுரை எம்எல்ஏ, இதன் சேவையைத் துவக்கிவைத்துப் பார்வையிட்டார். ரூ.11 லட்சம் மதிப்பிலான இக்கருவி மூலம் நோயாளியை பரிசோதித்து 2 மணி நேரத்தில் அவருக்கு காசநோய் இருக்கிறதா இல்லையா என்பதை கண்டுபிடித்து விட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதைத்தொடர்ந்து மருத்துவமனை வளாகத்தில் மூலிகை செடிகள், மரக்கன்றுளை நட்டிய இன்பதுரை எம்எல்ஏ, பிரசவ வார்டில் நேற்று அனுமதிக்கப்பட்டு பெண் குழந்தை பெற்றெடுத்த கேசவநேரியைச் சேர்ந்த பெண்ணுக்கு தமிழக அரசு சார்பில் பரிசு பெட்டகம் வழங்கினார்.