கருங்கல், பிப்.26: கருங்கல் அருகே பூட்டேற்றி காலனி பகுதியை சேர்ந்தவர் பிரபா (58). ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் சுமந்த் (36). கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு மனைவி பிரிந்து சென்று தாயார் வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் சுமந்த் வீட்டில் இறந்து கிடப்பதாக கருங்கல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. கருங்கல் போலீசார் சென்று விசாரித்த போது வீட்டில் உள்ளவர்கள் சுமந்த் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தனர். ஆனால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதற்கான கயிறோ அல்லது வேறு எந்த அடையாளமும் இல்லை. கழுத்தில் காயம் காணப்பட்டுள்ளது .சந்தேகமடைந்த கருங்கல் போலீசார் அவரது தம்பி பிரசாந்த் (32) மற்றும் தாயாரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர். மேலும் சுமந்த் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
