திருவனந்தபுரம், பிப். 26: கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகே 17 வயது மாணவியை பலாத்காரம் செய்து ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவத்தில் 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகே உள்ள தண்ணித்தோடு பகுதியைச் சேர்ந்தவர் அனந்து (26). இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் கோன்னி பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவியுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்த தொடர்பு நாளடைவில் நெருக்கமாக மாறியது. இந்தநிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அனந்து, மாணவியை பத்தனம்திட்டாவில் உள்ள ஒரு லாட்ஜுக்கு வரவழைத்து பலாத்காரம் செய்துள்ளார். அப்போது செல்போனில் சிறுமியை வீடியோ எடுத்த அனந்து தனது நண்பனான அபிஜித்துக்கு (28) அனுப்பி வைத்துள்ளார். பின்னர் அபிஜித் வீடியோவை மாணவிக்கு அனுப்பி வைத்து மிரட்டி தனது வீட்டுக்கு வரவழைத்து பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த மாணவியின் பெற்றோர் கோன்னி போலீசில் புகார் செய்தனர். போலீசார் போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்து அனந்துவையும், அபிஜித்தையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
