சென்னை: அகில இந்திய மாநில அரசு நான்காம் பிரிவு ஊழியர்கள் சம்மேளனத்தின் அகில இந்திய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் போபாலில் அகில இந்திய தலைவர் கே.கணேசன் தலைமையில் நேற்று நடந்தது. தமிழக அரசு நான்காம் பிரிவு தலைவர் எஸ்.மதுரம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து கே.கணேசன் கூறியதாவது:
ஒன்றிய அரசு அமைத்துள்ள எட்டாவது ஊதிய குழு தற்போதுள்ள விலைவாசியை கருத்தில் கொண்டு டி பிரிவு பணியாளருக்கு அடிப்படை ஊதியம் ரூ.30,000 ஆக நிர்ணயம் செய்யப்பட வேண்டும். தினக்கூலி தொகுப்பூதியம் மதிப்பூதியம் சிறப்பு காலம் வரை ஊதியம் பகுதிநேர பணியாளர்கள் அனைவரையும் அனைத்து மாநில அரசுகளும் 10 ஆண்டுகள் பணி முடித்தால் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
மருத்துவமனையில் பல்வேறு துறைகளில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிகின்ற அனைத்து டி பிரிவு பணியாளர்களையும் ஒன்றிய அரசு, அனைத்து மாநில அரசுகளும் உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இதுபோன்ற 10 அம்ச கோரிக்கைகளை ஒன்றிய அரசு நிறைவேற்றிட வலியுறுத்தி வருகின்ற மார்ச் 17ம் தேதி டெல்லி ராம் லீலா மைதானத்தில் கோரிக்கை தர்ணா போராட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.
