3 மாவட்டங்களில் மினி டைடல் பார்க் அமைக்க தமிழ்நாடு அரசு டெண்டர்

 

சென்னை: நாகை, கரூர், புதுக்கோட்டையில் மினி டைடல் பார்க் அமைக்க தமிழ்நாடு அரசு டெண்டர் அறிவித்துள்ளது. நாகையில் ரூ.42 கோடியில் 58,660 சதுர அடியிலும், கரூரில் ரூ.37 கோடியில் 64,000 சதுர அடியிலும் மற்றும் புதுக்கோட்டையில் ரூ.37 கோடியில் 60,386 சதுர அடியில் மினி டைடல் பார்க் கட்டுமான பணிகளை மேற்கொள்ள டெண்டர் விடப்பட்டுள்ளது.

சென்னை தரமணியில் டைடல் பார்க் கட்டடத்தை, தமிழக அரசின், ‘டிட்கோ, எல்காட் நிறுவனங்கள் கட்டி, ஐ.டி, எனப்படும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு வாடகைக்கு விட்டன. அங்கு. பல நிறுவனங்கள் தங் களின் அலுவலகத்தை துவக்கின. இதேபோல், டைடல் பார்க் அமைந்துள்ள, சென்னை ராஜிவ் காந்தி சாலையில், பல நுாறு ஐ.டி. நிறுவனங்கள் துவக்கப்பட்டதால், அந்த துறையில் பல ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகியுள்ளது.

இதனால், பிற மாவட்டங்களில் உயர் கல்வி படிப்பவர்களும் வேலைக்காக சென்னை வருகின்றனர். எனவே, மாநிலம் முழுதும் தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்பை உருவாக்க, அனைத்து மாவட்டங்களிலும், மினி டைடல் பார்க் கட்டும் பணியில், டைடல் பார்க் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

அதன்படி கரூர் மாவட்டத்தில், இனாம் கரூரில் தரை தளம் மற்றும் நான்கு தளங்களுடன் கூடிய மினி டைடல் பார்க் கட்ட ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய் டைடல் பார்க் நிறுவனம் தற்போது, டெண்டர் கோரியுள்ளது. புதுக்கோட்டையில் நத்தம்பண்ணை மற்றும் நாகப்பட்டினத்தில், தரை தளம் மற்றும் மூன்று தளங்களுடன் கூடிய மினி டைடல் பார்க் கட்டுவதற்கும் டெண்டர் கோரப்பட்டுள்ளது.

ஒவ்வொன்றும் சராசரியாக தலா, 50,000 சதுர அடியில் கட்டப்பட உள்ளது. திட்ட செலவு, 120 கோடி ரூபாய் ஆகும். தகுதியான நிறுவனங்களை தேர்வு செய்து, கட்டுமான பணிகளை நான்கு மாதங்களுக்குள் துவக்க திட்டமிடப்பட்டு உள்ளது. மூன்று டைடல் பார்க் வாயிலாக, 2,000க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட உள்ளன

 

 

Related Stories: