கோவையில் நாளை நடக்கிறது திமுக இளைஞர் அணி மேற்கு மண்டல சந்திப்பு: உதயநிதி ஸ்டாலின் பேசுகிறார்

கோவை: கோவையில் நாளை திமுக இளைஞர் அணி மேற்கு மண்டல சந்திப்பு நடக்கிறது. இதில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றுகிறார். தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட உள்ளது. தேர்தலை சந்திக்க திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன. தற்போது கூட்டணி அமைத்தல், தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரித்தல் ஆகிய பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் திமுக இளைஞர் அணி மேற்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு கோவை கருமத்தம்பட்டி கணியூர் டோல்கேட் அருகில் நாளை (ஞாயிறு) மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது.

மாநாட்டில் திமுக இளைஞரணி செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கி உரையாற்றுகிறார். துணைப் பொதுச்செயலாளர்கள் ஆ.ராசா, அந்தியூர் ப.செல்வராஜ், அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். மேற்கு மண்டல பொறுப்பாளர் செந்தில்பாலாஜி வரவேற்புரையாற்றுகிறார். அமைச்சர்கள் சு.முத்துசாமி, அர.சக்கரபாணி, மதிவேந்தன், கயல்விழி செல்வராஜ் மற்றும் மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர்கள், மாவட்ட, மாநகர செயலாளர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். முடிவில் இளைஞர் அணி துணைச் செயலாளர் கே.இ.பிரகாஷ் நன்றியுரையாற்றுகிறார். இதில், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் நீலகிரி மாவட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர். மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்டம், கிளை மற்றும் வாக்குச்சாவடி அளவிலான இளைஞர் அணி நிர்வாகிகள் வெண்சீருடை அணிந்து கலந்து கொள்ள உள்ளனர்.

Related Stories: