2026ல் காலியாகும் 71 எம்பி பதவிகளில் 40 இடங்களை கைப்பற்றுவதால் மாநிலங்களவையில் அசுர பலத்தை எட்டும் பாஜக: கூட்டாட்சி தத்துவத்திற்கு அச்சுறுத்தல்; எதிர்க்கட்சிகளுக்கு சவால்

புதுடெல்லி: நாடாளுமன்ற மாநிலங்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தனது பலத்தை மேலும் அதிகரிக்க உள்ளது. நாடாளுமன்ற மாநிலங்களவையில் காலியாக உள்ள 10 மாநிலங்களைச் சேர்ந்த 37 இடங்களுக்கான தேர்தல் வரும் மார்ச் 16ம் தேதி நடைபெற உள்ளது. தற்போது 245 இடங்களைக் கொண்ட மாநிலங்களவையில் பாஜக 103 உறுப்பினர்களுடன் தனிப்பெரும் கட்சியாக உள்ளது. அக்கட்சியின் கூட்டணி கட்சிகளையும் சேர்த்தால் தேசிய ஜனநாயக கூட்டணியின் பலம் 133 ஆக உயர்ந்து, பெரும்பான்மைக்கு தேவையான 122 என்ற எண்ணிக்கையை விட கூடுதலாக உள்ளது. இந்த பலத்தை வைத்துக் கொண்டு அவையில் விவாதமின்றி சட்டங்களை ஒன்றிய பாஜக அரசு நிறைவேற்றி வருகிறது. இந்த ஆண்டு நடைபெற உள்ள மொத்தம் 71 இடங்களுக்கான தேர்தலில் 40 இடங்களுக்கு மேல் கைப்பற்றி தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட பாஜக திட்டமிட்டுள்ளது.

மகாராஷ்டிரா மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் ஆளும் கூட்டணியின் பலம் அதிகரித்துள்ளதால், அங்கு கூடுதல் இடங்களை பாஜக கைப்பற்ற வாய்ப்புள்ளது. மகாராஷ்டிராவில் உள்ள 288 சட்டமன்ற உறுப்பினர்களில் பாஜகவிற்கு மட்டும் 131 பேர் ஆதரவு இருப்பதால், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா மற்றும் சுனேத்ரா பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் இணைந்து கூடுதல் இடங்களை வெல்லும். அதேபோல் பீகாரில் 89 சட்டமன்ற உறுப்பினர்களுடன் பலமாக உள்ள பாஜக, அங்கு சிராக் பஸ்வான் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுடன் இணைந்து எதிர்க்கட்சிகளை வீழ்த்த திட்டமிட்டுள்ளது. பீகாரில் நடந்த சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு பலவீனமடைந்துள்ள எதிர்க்கட்சிகள், இந்த தேர்தலில் 2 இடங்களை இழக்கும் சூழல் உருவாகியுள்ளது.

அசாமில் உள்ள 3 இடங்கள் மற்றும் ஒடிசாவில் உள்ள 4 இடங்களிலும் பாஜகவிற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. மேலும் அரியானா, சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் தலா 2 இடங்களையும், மேற்கு வங்கத்தில் குறைந்தது ஒரு இடத்தையும் கைப்பற்ற அக்கட்சி முனைப்பு காட்டி வருகிறது. எதிர்க்கட்சிகளைப் பொறுத்தவரை தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் மட்டுமே ஓரளவிற்கு நிம்மதி அளிப்பதாக உள்ளன. தமிழகத்தில் 6 இடங்களில் 4 இடங்களை திமுகவும், மேற்குவங்கத்தில் 5 இடங்களில் 4 இடங்களை திரிணாமுல் காங்கிரசும் கைப்பற்ற வாய்ப்புள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு தெலுங்கானா, சட்டீஸ்கர், அரியானா மற்றும் இமாச்சல பிரதேசத்தில் தலா ஒரு இடம் கிடைக்க வாய்ப்புள்ளது.

இந்த தேர்தலில் ஒன்றிய அமைச்சர்கள் ராம்தாஸ் அத்வாலே, ராம்நாத் தாக்கூர் ஆகியோர் மீண்டும் அவைக்குத் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங்கின் பதவிக்காலம் ஏப்ரல் மாதத்துடன் முடிவடைவதால், புதிய துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளன. ‘தற்போதைய சூழலில் இந்தியா கூட்டணியைச் சேர்ந்த அதிகபட்சமாக 14 வேட்பாளர்கள் மட்டுமே வெற்றி பெற வாய்ப்புள்ளது’ என்று அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இதன் மூலம் மாநிலங்களவையில் பாஜக தலைமையிலான கூட்டணி தனது பிடியை மேலும் வலுவாக்கி, மாநிலங்களவையில் சட்டங்களை நிறைவேற்றுவதில் தடையற்ற பெரும்பான்மையை எட்டும் நிலையை நோக்கி நகர்கிறது. மாநிலங்களவையில் அரிதி பெரும்பான்மையை பாஜக எட்டும் வகையில் சூழல்கள் அமைந்துள்ளதால், அது நாட்டின் கூட்டாட்சித் தத்துவத்திற்கு விடுக்கப்பட்டுள்ள மிகப்பெரிய அச்சுறுத்தலாகும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

துணைத் தலைவர் தேர்தல் எப்போது?
நாடாளுமன்ற மாநிலங்களவை துணைத் தலைவராக உள்ள ஹரிவன்ஷ் நாராயண் சிங்கின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் 9ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனையடுத்து காலியாகும் அந்த இடத்திற்கான தேர்தல் நடைமுறைகள் விரைவில் தொடங்க உள்ளன. அதற்கு முன்னதாக, பீகார் உள்ளிட்ட 10 மாநிலங்களில் காலியாக உள்ள 37 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் வரும் மார்ச் 16ம் தேதி நடைபெற உள்ளது. தற்போது துணைத் தலைவராக உள்ள ஹரிவன்ஷ் மீண்டும் அப்பதவிக்கு போட்டியிட வேண்டுமானால், முதலில் அவர் பீகாரில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டியது அவசியமாகும். மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவியேற்ற பிறகு, புதிய துணைத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேதியை அவைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிப்பார். உறுப்பினர்களில் ஒருவர் மற்றொருவரின் பெயரை முன்மொழிய, அதனை மற்றொருவர் வழிமொழிய வேண்டும். ஒன்றுக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களத்தில் இருந்தால் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு பெரும்பான்மை பெறும் நபர் தேர்ந்தெடுக்கப்படுவார். தற்போது மாநிலங்களவையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரும்பான்மை பலம் உள்ளதால், அந்த கூட்டணியின் வேட்பாளரே வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது. ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த ஹரிவன்ஷ் ஏற்கனவே 2018 மற்றும் 2020 ஆண்டுகளில் இருமுறை இப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி சார்பில் பொது வேட்பாளர் நிறுத்தப்பட வாய்ப்புள்ள நிலையில், வரும் ஜூலை மாதம் நடைபெற உள்ள மழைக்காலக் கூட்டத்தொடரில் இதற்கான தேர்தல் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: