சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்ப மனு விநியோகம் தொடங்கியது. தமிழ்நாடு – புதுச்சேரி மாநில சட்டப்பேரவை பொதுத்தேர்தலுக்கு திமுக சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புவோருக்கான விருப்பமனு விநியோகம் இன்று தொடங்கிய நிலையில், தலைமை கழகமான சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு காலையில் இருந்து தொண்டர்கள், நிர்வாகிகள் வருகை தந்து விருப்ப மனுக்களை வாங்கிச் செல்கின்றனர்.
விண்ணப்ப படிவத்தை ரூ.1,000 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம், பொதுத் தொகுதிக்கு ரூ. 25,000, மகளிர் மற்றும் தனித் தொகுதிக்கு ரூ. 15,000 விண்ணப்பக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மார்ச் 2ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம், வேட்பாளராக போட்டியிட விண்ணப்பித்தவர்கள் கூட்டணியின் தோழமைக் கட்சிகளுக்கென பகிர்ந்து கொள்ளப்பட்ட தொகுதிகளில் போட்டியிட விண்ணப்பித்திருப்பின் அவர்களது விண்ணப்பக் கட்டணம் பின்னர் திருப்பித் தரப்படும் என திமுக தலைமை கழகம் தெரிவித்துள்ளது.
