மாட்ரிட் ஓபன் டென்னிஸ் கோலோச்சிய கோபோலி: காலிறுதிக்கு முன்னேற்றம்

மாட்ரிட்: மாட்ரிட் ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் போட்டியில் நேற்று, இத்தாலி வீரர் பிளேவியோ கோபோலி, ரஷ்ய வீரர் டேனியில் மெத்வதேவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறி உள்ளார். ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த ஆடவர் ஒற்றையர் ரவுண்ட் ஆப் 16 போட்டியில் இத்தாலி வீரர் பிளேவியோ கோபோலி, ரஷ்ய வீரர் டேனியில் மெத்வதேவ் உடன் மோதினார். இப்போட்டியின் முதல் செட்டை கோபோலி, 6-3 என்ற புள்ளிக் கணக்கில் எளிதில் வசப்படுத்தினார். 2வது செட்டில் சுதாரித்து ஆடிய மெத்வதேவ், 7-5 என்ற புள்ளிக் கணக்கில் அந்த செட்டை வசப்படுத்தினார். அதையடுத்து வெற்றியை தீர்மானிக்கும் 3வது செட்டில் சிறப்பாக ஆடி ஆதிக்கம் செலுத்திய கோபோலி, 6-4 என்ற புள்ளிக் கணக்கில் அந்த செட்டை கைப்பற்றினார்.

அதனால், 2-1 என்ற செட் கணக்கில் வெற்றி வாகை சூடிய கோபோலி காலிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் ஜெர்மன் வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரெவ், செக் வீரர் ஜாகுப் மென்சிக் மோதினர். இப்போட்டியின் முதல் செட்டை, ஸ்வெரெவ், 6-4 என்ற புள்ளிக் கணக்கில் வசப்படுத்தினார். 2வது செட்டில் இருவரும் சளைக்காமல் ஆக்ரோஷமாக ஆடியதால் டைபிரேக்கர் வரை நீண்டது. அந்த செட்டை 7-6 (7-4) என்ற புள்ளிக் கணக்கில் மென்சிக் கைப்பற்றினார். பின், 3வது செட்டில் மீண்டும் ஆதிக்கம் செலுத்திய ஸ்வெரெவ், 6-3 என்ற புள்ளிக் கணக்கில் எளிதில் வென்றார். அதனால், 2-1 என்ற செட் கணக்கில் வெற்றி வாகை சூடிய அவர் காலிறுதிக்கு முன்னேறினார். இன்று நடக்கும் காலிறுதிப் போட்டியில் ஸ்வெரெவ் – கோபோலி மோதவுள்ளனர்.

Related Stories: