மும்பை: ஐபிஎல் 19வது தொடரில் நாளை மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கும் 41வது ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. சன்ரைசர்ஸ் அணியை பொறுத்தவரை பேட்டிங்கில் அபிஷேக் சர்மா, இசான் கிசன், ஹென்ரிக் கிளாசன் ஆகியோர் செம பார்மில் உள்ளனர். பவுலிங்கில் இசான் மலிங்கா, சகிப் உசேன், நிதிஷ் குமார் ரெட்டி விக்கெட் டேக்கராக உள்ளனர். ராஜஸ்தான் போட்டியில் இருந்து அணியில் இணைந்த கேப்டன் பேட் கம்மின்சும் தனது அனுபவ பவுலிங்கில் கலக்கினார்.
மும்பை இந்தியன்ஸ் அணியில் இந்தியாவுக்கு டி20 உலக கோப்பை வாங்கி கொடுத்த அணியில் 4 வீரர்களான சூரியகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, திலக் வர்மா, ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் இருந்தும் அந்த அணி இத்தொடரில் இதுவரை பெரிதாக சோபிக்காமல் இருந்து வருகிறது. கடைசியாக சென்னை அணியுடனான போட்டியில் 103 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து மும்பை அணி வரலாற்று தோல்வியை பதிவு செய்தது. மும்பை இந்தியன்சை பொறுத்தவரை பேட்டிங்கில் டி காக், திலக் வர்மா மட்டுமே நம்பிக்கை அளிக்கின்றனர்.
பவுலிங்கை பொறுத்தவரை ஆஷ்வானி குமார், கான்சபர் ஆகிய சுழற்பந்துவீச்சாளர்கள் மட்டுமே இதுவரை விக்கெட் டேக்கராக இருந்துள்ளனர். மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் அணிகள் இதுவரை ஐபிஎல்லில் 25 முறை நேருக்குநேர் மோதியுள்ளன. இதில் மும்பை இந்தியன்ஸ் 15 முறையும், சன்ரைசர்ஸ் 10 முறையும் வென்றுள்ளன. எனினும் தொடர்ச்சியாக 4 வெற்றி, புள்ளி பட்டியலில் 3வது இடம் என பலம் பொருந்திய சன்ரைசர்ஸ் அணியை புள்ளி பட்டியலில் 5 தோல்வி, 2 வெற்றியுடன் 9வது இடத்தில் இருக்கும் மும்பை அணி சமாளிப்பது பெரிய சவால் தான்.
