ராணிப்பேட்டை: வாலாஜாவில் வீடு கட்ட மணல் கடத்திய 2 போலீஸ்காரர்களை ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்பி அதிரடியாக உத்தரவிட்டார். ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை காவல் நிலைய போலீஸ்காரர்கள் சம்பத்குமார், மணிகண்டன். இவர்கள் இருவரும் மணல் கடத்தலில் ஈடுபடுவதாக எஸ்பி அய்மன் ஜமாலுக்கு சில நாட்களுக்கு முன்பு ரகசிய தகவல் கிடைத்தது. இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்த எஸ்பி உத்தரவிட்டார்.
தொடர்ந்து இன்ஸ்பெக்டர் சக்தி கணேஷ் விசாரணை நடத்தினார். அதில் சம்பத்குமார், மணிகண்டன் இருவரும் வாலாஜா அணைக்கட்டு ரோட்டில் சொந்தமாக வீடு கட்டி வருவதும், அதற்கு மணல் கடத்தி வந்து பதுக்கி வைத்திருந்ததும் கண்டறியப்பட்டது. இதுதொடர்பாக இன்ஸ்பெக்டர் அனுப்பிய அறிக்கையின்பேரில் இரு போலீஸ்காரர்களையும் ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்பி அய்மன் ஜமால் நேற்று அதிரடியாக உத்தரவிட்டார்.
