சென்னை: இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்குதல், நீண்ட கால விசா வழங்குதல் உள்ளிட்டவற்றுக்கு நிலையான மற்றும் மனிதாபிமான அடிப்படையிலான நிரந்தர தீர்வு காண வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: கடந்த 1983ம் ஆண்டு முதல், இலங்கையில் ஏற்பட்ட இனமோதல்களால் தங்கள் உயிரை காப்பாற்றி கொள்ள தங்கள் சொந்த மண்ணிலிருந்து வெளியேறிய இலங்கை தமிழர்களுக்கு, ஒன்றிய அரசின் ஆதரவு மற்றும் ஒப்புதலுடன், தமிழ்நாடு அரசு தங்குமிடம், வாழ்வாதார உதவி, கல்வி மற்றும் மருத்துவ வசதிகளைத் தொடர்ந்து வழங்கி வருகிறோம்.
தற்பொழுது, 89,000 நபர்கள் தமிழ்நாட்டில் வசித்து வருகின்றனர். இவர்களில் கணிசமானோர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் வசிப்பவர்கள், அதிலும் 40 சதவீதத்தினர் இந்திய மண்ணிலேயே பிறந்தவர்கள். தமிழ்நாடு அரசு தனது மனிதாபிமானப் பொறுப்புகளை சிறப்பாக நிறைவேற்றி வந்தாலும், இலங்கைத் தமிழர்கள் நீண்டகாலமாக சட்டரீதியான நிச்சயமற்ற நிலையிலேயே வாழ்ந்து வருகின்றனர்.
பல ஆண்டுகளாக தமிழ்நாட்டில், சமூகத்துடன் ஒன்றிணைந்து வாழ்ந்துவரும் போதிலும், குடியுரிமை அல்லது நீண்டகால விசா போன்ற நிலையான சட்டப்பூர்வமான தீர்வுகள் தற்போதுவரை இவர்களுக்கு கிடைக்கவில்லை. இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில், வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் தலைமையில், தமிழ்நாடு அரசு ஆலோசனை குழுவினை அமைத்து, இலங்கை தமிழர்களின் நிலை குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டுள்ளப்பட்டு அந்த பரிந்துரையின் படி, கடந்த 1987ம் ஆண்டு ஜூன்.30ம் தேதி முன்னதாக இந்தியாவில் பிறந்தவர்கள், தாய் அல்லது தந்தை இந்தியாவை சார்ந்தவர்கள், இந்தியரை திருமணம் செய்தவர்கள்,
இந்திய வம்சாவளி பின்னணியை உடையவர்கள் (அதற்கான சான்றாவணங்களை கொண்ட நபர்கள்) மற்றும் நீண்டகால விசா பெற தகுதியுள்ளவர்கள் என பல பிரிவுகளை சேர்ந்த இலங்கை தமிழர்கள் தற்போதுள்ள சட்டவிதிகளின் கீழ் முறைப்படுத்தப்படவும், அவர்களுக்கான குடியுரிமை வாய்ப்புகளை பெறுவதற்கும் தகுதியுடையவர்களாக உள்ளனர். 2003ம் ஆண்டு ஒன்றிய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட குடியுரிமை திருத்த சட்டமானது ‘சட்டவிரோதமாகக் குடியேறியவர்’ என்ற வகையை அறிமுகப்படுத்தியது.
இந்த திருத்தமானது தங்களது உயிரை பாதுகாக்கும் நோக்கத்தோடு, ஒன்றிய மற்றும் தமிழ்நாடு அரசினால் பாதுகாப்போடும், மாண்போடும் நடத்தப்படக்கூடிய தமிழ் சொந்தங்களுக்கு எதிர்பாராத, எதிர்மறையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. 1986ம் ஆண்டு வெளியிடப்பட்ட நிர்வாக அறிவுறுத்தல்கள், நமது பராமரிப்பிலும், பாதுகாப்பிலும் வசித்து வரும் இலங்கைவாழ் தமிழர்களிடம் இருந்து பெறப்படும் குடியுரிமை விண்ணப்பங்களை பரிசீலிப்பதில் கட்டுப்பாடுகளை ஏற்படுத்தியுள்ளதோடு, தமிழ்சொந்தங்களுக்கு சட்ட ரீதியான நீண்ட கால தீர்வுகளுக்கு தடையாகவே உள்ளது.
சமீபத்திய ஒன்றிய அரசின் கொள்கை முன்னேற்றங்கள், குறிப்பாக குடிவரவு மற்றும் வெளிநாட்டினர் (விலக்கு) ஆணை, 2025 ஆக்கபூர்வமான மற்றும் மனிதாபிமான நோக்கத்துடன் கூடிய அணுகுமுறையை வெளிப்படுத்துகின்றன. இந்த ஆணையின் அடிப்படையில் ஜனவரி 9, 2015 வரை இந்தியாவில் தஞ்சமடைந்த இலங்கை தமிழர்களை சட்டவிரோதமாக குடியேறியவர்களாக கருதக்கூடாது என்ற முறையான விளக்கம் ஒன்றிய அரசால் வழங்கப்படவேண்டும்.
இந்த விளக்கம் மிகவும் தேவையான சட்டப்பூர்வ தெளிவை வழங்குவதோடு இலங்கைவாழ் தமிழர்களின் நீண்ட கால சட்ட தீர்வை உறுதிப்படுத்தும். பி. உலகநாதன் மற்றும் ஒன்றிய அரசு (2019) இடையிலான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு உட்பட பல்வேறு நீதிமன்ற தீர்ப்புகள், இத்தகைய வழக்குகளில் சட்டத்தை தற்போதுள்ள சூழலுக்கு ஏற்ற சாத்தியமான மற்றும் மனிதாபிமான கண்ணோட்டத்துடன் அணுக வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தியுள்ளது. அதன் அடிப்படையில், ஒன்றிய அரசு இத்துடன் குறிப்பிடப்பட்டுள்ள நடவடிக்கைகளை பரிசீலித்து உடனடியாக செயல்படுத்த வேண்டும்.
* இலங்கை தமிழர்களின் குடியுரிமை விண்ணப்பங்களை பரிசீலிக்க தடையாக உள்ள முந்தைய நிர்வாக உத்தரவை ரத்து செய்திடவேண்டும்.
* தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு, சரிபார்க்கப்பட்ட அடையாள ஆவணங்களின் அடிப்படையில், குடியுரிமை அல்லது நீண்டகால விசா விண்ணப்பங்களுக்கு இலங்கை தமிழர்கள் விண்ணப்பிக்கும்போது, தற்போதைய நடைமுறையில் கடவுச்சீட்டு மற்றும் விசா தேவைகளை தள்ளுபடி செய்யும் நிர்வாக விளக்கத்தை வழங்க வேண்டும்.
* மாவட்ட அளவில் உள்ள அலுவலர்களுக்கு (மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர்) குடியுரிமை மற்றும் நீண்ட கால விசா விண்ணப்பங்களை விரைவாக பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதற்கான உரிய அதிகாரங்களை வழங்க வேண்டும்.
* 2015ம் ஆண்டு ஜன.9ம் தேதி வரை இந்தியாவில் வசித்துவரும் இலங்கைத் தமிழர்களை சட்டவிரோதமாகக் குடியேறியவர்களாகக் கருதக்கூடாது என்ற விளக்கத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும். அத்துடன், நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் மரியாதையுடனும், ஒழுக்கத்துடனும், ஆழ்ந்த பண்பாட்டு உறவுகளுடனும் வாழ்ந்து வரும் இலங்கை தமிழர்கள், ஒன்றிய அரசின் ஒருங்கிணைப்புடன் ஆதரிக்கப்பட்டு, ஒழுங்குபடுத்தப்பட்ட ஒன்றிய மற்றும் மாநில அரசின் நிர்வாக செயல்பாடுகள் மூலம் பராமரிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வருகின்றார்கள்.
அவர்களின் நிலையை தொடர்ந்து “சட்டவிரோதம்” என வரையறுப்பது, அவர்கள் இந்தியாவிற்கு வந்த மனிதாபிமானச் சூழலையோ அல்லது அரசின் அனுமதியுடன் தங்கியிருப்பதையோ, பண்பாட்டு மதிப்பீடுகளையோ பிரதிபலிக்கவில்லை. மேற்குறிப்பிட்ட கருத்துகள் மீது விரைவான, மனிதாபிமான அடிப்படையிலான நல்ல முடிவினை எடுப்பீர்கள் என நம்புகிறேன். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
* 2015ம் ஆண்டு ஜன.9ம் தேதி வரை இந்தியாவில் வசித்துவரும் இலங்கைத் தமிழர்களை சட்டவிரோதமாகக் குடியேறியவர்களாகக் கருதக்கூடாது என்ற விளக்கத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும்.
