சென்னை: சமத்துவ மக்கள் கழக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் சென்னை கோயம்பேட்டில் நடந்தது. நிறுவனத் தலைவரும், தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரிய தலைவருமான எர்ணாவூர் நாராயணன் தலைமை வகித்தார். வரும் சட்டமன்ற தேர்தல் குறித்து மாவட்ட செயலாளர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டது.
தொடர்ந்து வருகிற 2026 சட்டமன்றத் பொது தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு சமத்துவ மக்கள் கழகம் தனது முழு ஆதரவு அளிப்பதுடன், 234 தொகுதியிலும் தேர்தல் பணியாற்றி அதன் வெற்றிக்கு பாடுபட வேண்டும் என்ற தீர்மானத்தை தலைவர் எர்ணாவூர் ஏ.நாராயணன் முன்மொழிந்து பேசினார். தொடர்ந்து காலை உணவு திட்டம், புதுமைப்பெண் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், வீடு தேடி மருத்துவ திட்டம், உங்களைத் தேடி திட்டம், நான் முதல்வன் திட்டம், கட்டணமில்லா பேருந்து சேவையான விடியல் பயணம் திட்டம் என எண்ணற்ற திட்டங்களை தமிழ்நாட்டு மக்களுக்கு அளித்த தமிழக முதல்வருக்கு பாராட்டுகள், நன்றி.
எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி கைது செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்களையும் அவரது படகுகளையும் இலங்கை அரசிடமிருந்து விடுவித்து, ஒன்றிய அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும். தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூரிலிருந்து சென்னைக்கு கூடுதலாக ரயில்கள் இயக்க தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசை வலியுறுத்த வேண்டும். ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்கீடு செய்யாமல் வஞ்சிக்கின்ற ஒன்றிய அரசை கண்டிக்கிறோம் என்பது போன்ற 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
