அச்சம் இல்லாத சமுதாயத்தால்தான் வலிமையான தேசத்தை உருவாக்கலாம்: ஈஷா சிவராத்திரி விழாவில் ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு

கோவை: அச்சம் இல்லாத சமுதாயத்தால் தான் வலிமையான தேசத்தை உருவாக்க முடியும் என்று கோவை ஈஷா மகா சிவராத்திரி விழாவில் ஒன்றிய பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார். கோவை ஈஷாவில் மகா சிவராத்திரி விழா நேற்று விமரிசையாக நடந்தது. சத்குரு முன்னிலையில் நடந்த இவ்விழாவில் ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உட்பட பல முக்கியப் பிரமுகர்கள் விருந்தினர்களாக கலந்து கொண்டார்.

முன்னதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தியானலிங்கம், லிங்கபைரவி சன்னதிகளில் தரிசனம் செய்தார். இவ்விழாவில் சத்குரு பேசுகையில், ‘உங்கள் சொந்த மனம், எண்ணம், உணர்ச்சி மற்றும் ஆற்றல்கள் உங்களுக்கே ஒரு தடையாக மாறாமல் இருப்பதை ஒவ்வொருவரும் உறுதி செய்ய வேண்டும். இதை எளிதாக்குவது தான் யோகக் கலை. மனித உடலே ஒரு அதிநவீன வேதியியல் தொழிற்சாலை போன்றது. உங்கள் உடலினை நிர்வாகம் செய்யும் ஒரு சிறந்த சி.இ.ஓ-வாக நீங்கள் இருந்தால், பேரின்பத்தின் வேதிப்பொருட்களை உற்பத்தி செய்வீர்கள். நீங்கள் ஒரு மோசமான நிர்வாகியாக இருந்தால், கவலை, மன அழுத்தம், முட்டாள்தனம் ஆகிய தேவையில்லாத விஷயங்களை உற்பத்தி செய்வீர்கள் என்றார்.

இவ்விழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசுகையில், “நான் காசியில் இருந்து வருகிறேன். காசிக்கும் தமிழ்நாட்டுக்கும் இருக்கும் தொடர்பு மிகவும் பழமையானது.
காசி உலகின் மிகப் பழமையான நகரங்களில் ஒன்று என்றால், தமிழ்நாடு பண்பாடு உலகின் மிகப் பழமையானது. சத்குருவின் வழிகாட்டுதலில் ஈஷாவில் நிகழும் மகா சிவராத்திரி விழா சர்வதேச அளவிலான ஆன்மீக கொண்டாட்டமாகவும், பாரத தேசத்தின் பண்பாட்டு மறுமலர்ச்சியின் புதிய பிரகடனமாகவும் விளங்குகிறது. பாதுகாப்பு என்பது வெறும் வெளிச்சக்திகள் சார்ந்தது மட்டுமல்ல, அது வலிமைமிக்க தேசிய உணர்விலிருந்து வருவது. அச்சம் இல்லாத சமுதாயத்தால் தான் வலிமையான தேசத்தை உருவாக்க முடியும். இந்த அச்சமின்மை ஆன்மீக அடிப்படையில் இருந்துதான் வரும். இவ்வாறு பேசினார்.

விழாவில் நாட்டின் வளர்ச்சிக்கு பங்களித்த சாதனையாளர்களை அங்கீகரிக்கும் வகையில் பவ்ய பாரத் பூஷண் விருதுகள் வயலின் கலைஞர் டாக்டர் என்.ராஜம், பரதநாட்டிய கலைஞர் அலர்மேல்வள்ளி, விண்வெளி விஞ்ஞானிகள் நம்பி நாராயணன், கிரண் குமார், வரலாற்றாசிரியர் விக்ரம் சம்பத், பேட்மிட்டன் வீராங்கனை பி.வி. சிந்து, ஏர் மார்ஷல் ஜித்தேந்திர மிஷ்ரா, கடற்படை தலைமை அதிகாரி ராகுல் விலாஸ், ராணுவ அதிகாரி ராத்தே உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டன. விழாவில் மஹாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், முன்னாள் அமைச்சர் எஸ்,பி. வேலுமணி, பிரமேலதா விஜயகாந்த், சுரேஷ் கோபி, முன்னாள் கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரசாத், நடிகைகள் சாரா, நிதி ஷெட்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: