சென்னை: தவெக தலைவர் விஜயுடன் தொடர்புபடுத்தி நடிகை திரிஷா பற்றி விமர்சனம் செய்த நயினார் நாகேந்திரனின் பேச்சுக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது. திமுக, அமமுக, தவெகவினரோடு, அதிமுக கூட்டணியில் உள்ள டிடிவி தினகரனே இந்த பேச்சுக்கு தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
தமிழக வெற்றி கழகத்தில் நிர்வாகிகள் சந்திப்பு பரப்புரை கூட்டம் சேலம் சீலநாயக்கன்பட்டியில் நேற்று நடந்தது. கூட்டத்தில் தவெக தலைவர் நடிகர் விஜய் கலந்து கொண்டு பேசுகையில், “எம்ஜிஆர் ஆரம்பித்த அதிமுகவை எடப்பாடி வைத்துள்ளார். அண்ணா ஆரம்பித்த திமுகவை மு.க.ஸ்டாலின் வைத்துள்ளார்” என்று அரசியல் ரீதியான கடும் விமர்சனங்களை முன்வைத்தார். மேலும், “அடுத்தவர்கள் அட்ரஸில் அரசியல்வாதியாக இருக்கும் இவர்கள் எல்லாம் ஒரு சவால். என்னைப் போல் தனியாக சொந்தமாக கட்சி ஆரம்பித்து குறைந்தபட்சம் ஒரு சதவீதம் வாக்கு வாங்கிக் காட்டும் தில் இருக்கிறதா? திராணி இருக்கிறதா? 30 ஆண்டுகளாக மக்கள் இயக்கமாக இருந்து மிகப்பெரிய அரசியல் கட்சியாக வளர்ந்துள்ளோம்.
கூட்டணி கட்சிகளை மட்டும் நம்பியிருந்த 75 ஆண்டு கட்சி, 50 ஆண்டு கட்சி என ஆட்சி அதிகாரத்தில் இருந்து கொண்டிருக்கும் இவர்கள் எல்லாம் மீறி, இன்று களத்தில் தனியாக நின்று இந்த இரண்டே ஆண்டுகளில் முதன்மை சக்தியாக வளர்ந்து 30 சதவீதத்தைத் தாண்டி மக்கள் ஆதரவைப் பெற்றிருக்கும் நமக்கு அனுபவம் இல்லையா?” என்று ஆவேசமாக பேசினார். மேலும், “கொள்ளையடிப்பதில் எல்லாம் எங்களுக்கு அனுபவம் இல்லைதான். கொள்கையைப் பெயருக்கு மட்டும் வைத்துக் கொண்டு நேரடியாக சரணடைவது, மறைமுகமாக சரணடைவது இதிலெல்லாம் எங்களுக்கு அனுபவம் இல்லைதான். சுட்டுப் போட்டாலும் வராது” என்றும் எடப்பாடி பழனிச்சாமியை மறைமுகமாக விமர்சித்து இருந்தார்.
இது குறித்து நேற்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், “பாவம், அவர் அனுபவமே இல்லாதவர். முதலில் வீட்டிலிருந்து வெளியே வரவேண்டும். திரிஷா வீட்டிலிருந்து வெளியே வரவேண்டும். வெளியில் வந்தால் தான் எல்லாமே நடக்கும்” என்று தெரிவித்திருந்தார். திரிஷா குறித்த பாஜக தலைவர் நாகேந்திரனின் கருத்துக்கு பல்வேறு தரப்பிலும் இருந்து கண்டனங்கள் குவிய தொடங்கியுள்ளன.
இது குறித்து திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் தனது எக்ஸ் தளம் பதிவில், “இந்தியாவை ஆளும் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர், அரசியல் கருத்துகளைச் சொல்லும்போது, பொதுவெளியில் பயணிக்கும் பெண்ணைப் பற்றி அவதூறாகப் பேசுவது அழகல்ல. பெண்களைக் கண்ணியத்துடன் பேசுவதும், நடத்துவதுமே நாகரீக அரசியல் ஆகும்” என்றும் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
இதே போல பாஜக கூட்டணியில் உள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், நயினாரின் இந்த பேச்சுக்கு கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அதில், பொதுவாக தனிப்பட்ட விமர்சனங்களை தவிர்க்க வேண்டும். அது தான் ஆரோக்கியமான அரசியல் ஆகும்” என்று கூறியுள்ளார்.
இதே போல முன்னாள் அமைச்சரும், தவெக தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், நயினார் இருப்பது ஒரு கட்சியே இல்லை. அவர் ஒரு ஆளே இல்லை” என்றும் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
தவெக பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத், ”ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவராக இருக்கும் ஒருவர், எத்தகைய அரசியல் கண்ணியத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற அடிப்படை அறிவைக்கூட நயினார் நாகேந்திரன் இழந்துவிட்டார். எங்கள் கிளைச் செயலாளர் கூட இவரை விடக் கண்ணியத்தோடு பேசுவார். 4 கோடி ரூபாய் சிக்கலில் சிக்கித் தவிக்கும் ஒரு நபர், அடுத்தவர்களுக்கு அறிவுரை கூறுவது இந்த ஆண்டின் மிகப்பெரிய நகைச்சுவை. கடந்த தேர்தலில் கட்டைப்பையில் கட்டுக் கட்டாகப் பணம் தூக்கித் திரிந்த நாகம், இன்று ஊருக்கு உபதேசம் செய்வதா? பொறாமைத் தீயில் வெந்து கொண்டிருக்கும் நீங்கள், வரம்பு மீறி விமர்சனம் செய்தால், தமிழகப் பெண்கள் திருப்பித் தரப்போகும் பதிலடிகளுக்கு உங்களால் பதில் சொல்ல முடியாது” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
தவெக இணை பொதுச்ெசயலாளர் நிர்மல் குமார், ”நயினார் நாகேந்திரன் போன்ற கேவலமான நபர்கள் கட்சியின் தலைமைப் பொறுப்பில் அமர்ந்து கொண்டு பொதுவெளியில் நாகரீகம் இன்றி என்ன பேசுவது என்று தெரியாமல் பேசிக் கொண்டிருக்கிறார். அவர்கள் வெற்றி பெறப் போவதில்லை மக்கள் புறக்கணித்து விட்டார்கள். ஏற்கனவே நோட்டாவிற்கு கீழே இருப்பவர்கள் கேவலமான தோல்வியை தழுவ போகிறார்கள். இறுதிவரை நயினார் நாகேந்திரன் அரசியல்வாதியாக மாறப் போவதில்லை. அவர் தன்னை தொழிலதிபராகத்தான் காட்டிக் கொண்டிருக்கிறார். கடைசி வரை அரசியல்வாதியாக முயற்சி செய்து கொண்டிருக்கும் நபராகவே அறியப்படுகிறார். அவரை போன்ற நபர்கள் தரக்குறைவான பேச்சுகளை தவிர்த்துக் கொள்ள வேண்டும். இந்த தேர்தலில் அவர் படுதோல்வி அடைவார்” என்று எச்சரித்துள்ளார்.
