காரைக்கால்: புதுச்சேரியில் ஊழலை முடிவுக்கு கொண்டுவந்துள்ளோம் என அமித் ஷா தெரிவித்துள்ளார். புதுவை மாநிலம் காரைக்காலில் நடைபெற்று வரும் பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய ஒன்றிய அமைச்சர் அமித் ஷா; திருநள்ளாறு சனீஸ்வரர், பத்ரகாளியம்மனுக்கு தலைவணங்குகிறேன்; புதுச்சேரி புண்ணிய பூமி. உலகின் மிகத்தொன்மையான தமிழ் மொழியில் உரையாற்ற முடியவில்லை என்பதற்காக மன்னிப்பு கேட்கிறேன். புதுச்சேரியில் ஊழலை தேசிய ஜனநாயக கூட்டணி அரசு முடிவுக்கு கொண்டுவந்துள்ளது. டெல்லிக்கு அடிமையாக காங்கிரஸ் அரசு ஆட்சி செய்து வந்தது.
புதுச்சேரியில் அரசியல் நிலைத்தன்மை, ஸ்திரத்தன்மையை அமைத்துள்ளோம். புதுச்சேரியில் 5 ஆண்டுகள் காங்கிரஸின் மோசமான ஆட்சியில் சீர்கேடு உச்சத்தில் இருந்தது. கடந்த 5 ஆண்டுகளில் சட்டம் ஒழுங்கை சீர் செய்துள்ளோம்; வளர்ச்சிப் பயணத்தை தொடர வேண்டும். அடுத்த 5 ஆண்டுகளில் புதுச்சேரியை வளர்ச்சியடைந்த மாநிலமாக மாற்ற பயணிப்போம். சிறப்பான ஆட்சியை முதலமைச்சர் ரங்கசாமி அளித்துவருகிறார். 2021இல் நடந்த புதுச்சேரி தேர்தலில் மக்கள் நமக்கு 44% ஆதரவை அளித்துள்ளனர். இம்முறை நம் கூட்டணிக் கட்சிகள் 60% வாக்குகளைப் பெற்று, 24 இடங்களைப் பெறுவோம்.
மீனவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த உள்ளோம். இளைஞர்களை மனதில் கொண்டு புதுச்சேரியை தகவல் தொழில்நுட்ப மையமாக மாற்ற வேண்டும். புதுச்சேரியில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரும் பணியில் ஈடுபடுவோம் என்று கூறினார்.
