காளையார்கோவில், பிப்.4: காளையார்கோவில் அருகே உள்ள சூசையப்பர்பட்டிணம் ஊராட்சிக்கு உட்பட்ட குறுந்தணி-நற்புதம் செல்லும் தார்ச்சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளதால் அடிக்கடி விபத்து ஏற்படுகின்றது.
காளையார்கோவில் அருகில் சூசையப்பர்பட்டிணம் ஊராட்சிக்கு உட்பட்ட குறுந்தனி, நற்புதம் கிராமங்களுக்கு செல்லும் தார்ச்சாலை சில வருடங்களுக்கு முன் போடப்பட்டது. தற்போது சாலையின் பெரும் பகுதி பெயர்ந்து குண்டும் குழியுமாக உள்ளது. இச்சாலை வழியாக குறுந்தணி, நற்புதம், சாணாவூரணி, அரசகுளம், வேளாங்குளம், சிலுக்கபட்டி கிராமங்களில் இருந்து 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் செல்கின்றனர். நடப்பதற்கே லாயக்கற்ற இச்சாலையில் இரவு நேரங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் அதிகளவு விபத்தில் சிக்குகின்றனர். எனவே சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.